Friday 2 December 2011

கூடங்குளமும் சந்தேகங்களும்..

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள்.. ஏன் எதற்கு என்று யோசிப்பதற்கு முன்னால் இணையதள புள்ளி விவரப்படி இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 20 .இவற்றினாலெல்லாம் பிரச்சினை வந்து விடாதா?


கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் முன் , அவசரகால நடவடிக்கைக்கான செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.. இதுவே பிரச்சினைக்கான மூலகாரணமும் ஆயிற்று.

செயல்முறை விளக்கம் நடைப்பெற்றபோது அங்கிருந்த உள்ளூர்மக்களுக்கு பயம் வந்ததில் சிறு குறையும் காண முடியாது. ஆனால் அதன் பின்பு நடைபெறும் விஷயங்களை பார்த்தால் ஐயுற தோன்றுகிறது. முதலில் அங்கிருந்த அதிகாரிகள் சமாதான படுத்தி பார்த்தார்கள், பின்பு மற்றொரு குழு அதற்கெல்லாம் பிறகு மத்திய குழு. முயற்சி பலிக்க வில்லை.


பின்னர் மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் A.P.J.அப்துல் கலாம் அய்யா அவர்கள் கூடங்குளம் வந்து சுற்றி பார்த்துவிட்டு அவருடைய கருத்தினை எடுத்து உரைத்தார். அதன் பின்னரும் கூடங்குளம் போராட்ட குழுவினர் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டால் , கட்டாயம் சந்தேகம் வரும், போராட்டக்காரர்கள் மீது .  அய்யா அப்துல் கலாம் அவர்கள் அணுவியல் பொறியாளர் இல்லையாம்.  அட இதை சொல்லும் போராட்டக்காரர்களும் அணுவியல் பொறியாளர்கள் இல்லை சார். ஒருவேளை போராட்டக்காரர் ரத்தத்திலேயே அணுவியல் பொதிந்து இருக்குமோ?




அணுமின் நிலைய அதிகாரிகள் , அந்த அணுமின் நிலையத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில்தான் குடியிருக்க போகிறார்கள். யாருக்கேனும் ஆபத்து எனில் அவர்களை மீறிதான் மற்றவர்களுக்கு. அந்த அதிகாரிகள் இதை கூறியும் ஒன்றும் நடக்கவில்லை. போராட்டக்காரர்கள் ஒருபடி மேலே சென்று , அணுமின் நிலைய ரகசியங்களை அவர்களிடத்தில் கொடுக்க வேண்டுமாம்.


போராட்டக்காரர்கள் , கம்யுனிஸ்டுகளை பற்றி கருத்து கூறியதாவது , " இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்ய உதவியோடு கட்டப்படுவதால் தான் இவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் , ரஷ்யாவிற்கு பதில் அமேரிக்கா இருந்தால் கம்யுனிஸ்டுகள் கலகமூட்டியிருப்பார்கள் ". சரி இதே கேள்வியை திருப்பிக்கேட்போம்.

இந்த அணுமின் நிலைய கட்டுமானத்தில் ரஷ்யாவிற்கு பதில் அமேரிக்கா இருந்தால் போரட்டக்குழுவினருக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?  படிக்கும் உங்களுக்கு சந்தேகம் எழவில்லை? தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் , தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்பலாம். அதற்காக நான் யாரையும் குற்றம் சொல்லிவிட வில்லை.

மத்திய அரசு  , போராட்டக்காரர்களின் சந்தேகங்களுக்கு விதிமுறை மீறாமல் விளக்கம் அளிக்கலாம் அல்லது போராட்டக்காரர்களின் சந்தேகங்களின் மீது சந்தேகம் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் . பிரச்சினைக்கான முடிவு அடுத்த பிரச்சினைக்கு ஆதாரமாக இருந்து விடக்கூடாது.

" சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் " இது இந்திய அரசுக்கும் பொருந்தும்  அதேபோல் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கும்  பொருந்தும்.

அன்புடன் ,
விவேக்.
( While you smile , You are Beautiful.. While you Laugh, You are very Beautiful.. Atleast be beautiful.)









No comments:

Post a Comment